கலிநிலைத் துறை இரவியை நீக்கி இளம் பிறை வருக எனல் 3198. | 'நீலச் சிகரக் கிரி அன்னவன், 'நின்ற வெய்யோன், ஆலத்தினும் வெய்யன்; அகற்றி, அரற்றுகின்ற வேலைக் குரலைத் "தவிர்க" என்று விலக்கி, மேலை மாலைப் பிறைப் பிள்ளையைக் கூவுதிர் வல்லை' என்றான். |
நீலச் சிகரக் கிரி அன்னவன் - சிகரங்கள் ஓங்கிய நீல மலை போன்ற இராவணன்; 'நின்ற வெய்யோன் - இப்போது நிற்கும் கதிரவன்; ஆலத்தினும் வெய்யன் - நஞ்சினும் கொடியவன்; அகற்றி - அவனை நீக்கி விட்டு; அரற்றுகின்ற வேலைக் குரலை - பேரொலி எழுப்பும் கடலின் ஓசையையும்; தவிர்க என்று விலக்கி - நீங்குக என்று விலக ஆணையிட்டு; மேலை - முன்பு வந்த; மாலைப் பிறைப் பிள்ளையை - மாலைப் பொழுதின் இளம்பிறையை; வல்லை - விரைவாக; கூவுதிர் - அழையுங்கள்'; என்றான் - எனப்(பணியாளருக்கு) உத்தரவிட்டான். மீண்டும் நிலவைக் கொணர ஆணையிட்டான். இளம்பிறையைப் பிறைப் பிள்ளை என்று படிமச் சிறப்புறக் குறித்த நயம் உணர்க. 132 |