3199. | சொன்னான் நிருதர்க்கு இறை; அம் மொழி சொல்லலோடும்; அந் நாளில் நிரம்பிய அம் மதி, ஆண்டு ஓர் வேலை முந் நாளின் இளம் பிறை ஆகி முளைத்ததுஎன்றால், எந் நாளும் அருந் தவம் அன்றி, இயற்றல் ஆமோ? |
நிருதர்க்கு இறை - அரக்கரின் தலைவனாகிய இராவணன்; சொன்னான் - மேற் கூறியவாறு கட்டளையிட்டான்; அம்மொழி சொல்லலோடும் - அக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும்; அந்நாளில் நிரம்பிய அம்மதி - அன்று முழுநிலவாய்த் திகழ்ந்த அச் சந்திரன்; ஆண்டு - அவ்விடத்தில்; ஓர் வேலை - ஒரு புறத்தில்; முந்நாளின் - மூன்றாம் நாளின்; இளம்பிறை ஆகி - கீற்று நிலவாக; முளைத்தது என்றால் - உதித்தது எனில்; எந்நாளும் - எக்காலத்திலும்; அருந்தவம் அன்றி - அரிய நற்றவம் செய்திருந்தால் அல்லாமல்; இயற்றல் ஆமோ?- இத்தகு அருஞ்செயல் நிகழ்த்துவது சாத்தியம் ஆகுமா? (ஆகாது). முந்நாள் இளம்பிறை - மூன்றாம் பிறைச்சந்திரன். 'வேண்டிய வேண்டி யாங்கு எய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்' (திருக்குறள் 265) என்னும் கருத்து ஒப்பிடத்தக்கது. 133 |