பிறையைப் பழித்தல் 3200. | குடபாலின் முளைத்தது கண்ட குணங்கள்-தீயோன், 'வடவா அனல்; அன்று எனின், மண் பிடர் வைத்த பாம்பின் விடவாள் எயிறு; அன்று எனின், என்னை வெகுண்டு, மாலை அட, வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே. |
குடபாலின் முளைத்தது கண்ட - மேற்குத் திசையில் இளம்பிறை தோன்றியதைக் கண்ட; குணங்கள் தீயோன் - தீய பண்புகளை உடைய இராவணன்; (இது); வடவா அனல் - வடவைத் தீயே ஆகும்; அன்று எனின் - இல்லையெனில்; மண்பிடர் வைத்த பாம்பின் - பூமியைத் தலையில் ஏந்திய ஆதிசேடனின்; விடவாள் எயிறு - நஞ்சு தோய்ந்த கூரிய பல் ஆகும்; அன்று எனின் - இல்லையெனில்; மாலை - மாலைப் பொழுது; என்னை வெகுண்டு - என் மீது சினம் கொண்டு; அட - கொல்லுதற்காக; வாள் உருவிக் கொடு - வாளை உருவிக் கொண்டு; தோன்றியது ஆகும்- எதிரில் காட்சி தருவது ஆகும்; அன்றோ - அல்லவோ (என்றான்). வடவைத் தீ கடலின் நடுவில் பெண் குதிரை முகத்தில் தோன்றுவது; பிரளய கால நெருப்பு என்றும் கூறுவர். 134 |