3201.'தாது உண் சடிலத் தலை வைத்தது-
     தண் தரங்கம்
மோதும் கடலிற்கிடை
     முந்து பிறந்தபோதே,
ஓதும் கடுவைத் தன் மிடற்றில்
     ஒளித்த தக்கோன்,
"ஈதும் கடு ஆம்", என எண்ணிய
     எண்ணம் அன்றே?

    தண் தரங்கம் - குளிர்ந்த அலைகள்; மோதும் கடலிற்கிடை -
வீசும் திருப்பாற் கடலிடையே இருந்து; முந்து பிறந்த போதே - முன்பு
உதித்த காலத்தில்; ஓதும் கடுவை - கொடிதாய் உரைக்கப்படும் ஆலகால
நஞ்சை; தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் - தன் கழுத்தில் மறைத்த
சிவபெருமான்; தாது உண் சடிலம் - (கொன்றைப் பூவின்) மகரந்தம்
மலிந்த சடை முடி சூழ்ந்த; தலை வைத்தது - தலைமீது பிறையை
வைத்துக் கொண்டது; ஈதும் கடு ஆம் என - இதுவும் விடம் ஆகும்
என்று; எண்ணிய எண்ணம் அன்றே - கருதிய கருத்தினால் அல்லவா?

     இப்பாடலின் கருத்து தற்குறிப்பேற்ற அணி.                  135