3203. | 'கன்னக் கனியும் இருள்தன்னையும் காண்டும் அன்றே? முன்னைக் கதிர் நன்று; இது அகற்றுதிர்; மொய்ம்பு சான்ற என்னைச் சுடும்என்னின், இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர் பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ? |
முன்னைக் கதிர் நன்று - முன்பு வந்த கதிரவனே (இப்பிறையினும்) நன்றாகும்; இது அகற்றுதிர் - இப் பிறை நிலவை நீக்குமின்; மொய்ம்பு சான்ற - வலிமைமிக்க; என்னைச் சுடும் என்னின் - என்னையே இப் பிறை துன்புறுத்தும் எனில்; இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர் - ஏழு உலகங்களிலும் வாழும் மக்களில்; பின்னைச் சிலர் - வேறு எவரேனும் சிலர்; உய்வர் என்று - பிழைப்பர் என்று; அங்கு ஒரு பேச்சும் உண்டோ - அப்படிப் பேசவும் வாய்ப்பு உண்டோ? (இல்லை) எனவே; கன்னக் கனியும் - கன்னங்கரேலெனச் செறியும்; இருள் தன்னையும் காண்டும் அன்றே - இருட்டின் இயல்பையும் காண்பது பொருத்தம் அல்லவா? (என்றான்) இருளை வருமாறு கட்டளையிட்டான் என்பது கருத்து. பென்னம் பெரிய என்றாற்போல 'கன்னக் கனிய' என்றார். 137 |