3205. | முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என்? முற்றும் முற்றிப் பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக் குருடு ஈங்கு இது என்ன, குறிக்கொண்டு, கண்ணோட்டம் குன்றி, அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம். |
முருடு ஈர்ந்து - (அவ்விருள்) திரட்சியான மரமென அறுக்கத் தக்கதாகி; உருட்டற்கு எளிது என்பது என் - கம்பமாய் உருட்சி செய்யத் தக்கதாய் எளிதாக அமைந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?; பொருள் முற்றும் முற்றி - பொருள் அறிவு முழுமையாய் அடைந்து; தீங்கு இல் கேள்விச் சுடர் - குற்றமற்ற கேள்விச் செல்வமாகிய ஒளி; புக்கு வழங்கல் இன்றி - உட்புகுந்து வெளிச்சம் தராமல்; குருடு ஈங்கு இது என்ன - இவ்வுலகில் மனக் குருடே உண்மையான குருடு எனும்படி; குறிக் கொண்டு- அப் பெயருக்கு இலக்காகி; கண்ணோட்டம் குன்றி - அருள் நோக்குக் குறைந்து; அருள் தீர்ந்த - அருள் அருகிப் போன; நெஞ்சின் - மனித உள்ளத்தை விடவும்; அவ்வந்தகாரம் - அவ்விருளானது; கரிது என்பது - கருமை என்று கூறத்தக்கதாம். அறிவொளி சாரா உள்ளத்தை இருளுக்கு உவமித்தார். 139 |