3206. | விள்ளாது செறிந்து இடை, மேல் உற ஓங்கி, எங்கும் நள்ளா இருள் வந்து, அகன் ஞாலம் விழுங்கலோடும், 'எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது உள்ளாது, உமிழ்ந்தான், விடம் உண்ட ஒருத்தன்' என்றான். |
விள்ளாது - துண்டு படாமல்; இடை செறிந்து - எங்கும் இடைவெளியின்றி நிறைந்து; மேல் உற ஓங்கி - விண்ணையும் வளைத்து வளர்ந்து; எங்கும் நள்ளா இருள் வந்து - எங்கும் பொருந்தாத இருள் வந்து; அகன் ஞாலம் விழுங்கலோடும் - பரந்த உலகினை மூடி மறைத்ததும்; விடம் உண்ட ஒருத்தன் - நஞ்சினை விழுங்கிய ஒப்பற்ற சிவபெருமான்; எள்ளா உலகு யாவையும் - இகழத் தக்கதல்லாத எல்லா உலகங்களையும்; யாவரும் - எல்லா மக்களையும் (பொருள்களையும்); வீவது என்பது உள்ளாது - அழிக்கும் என்று கருதாமல்; உமிழ்ந்தான் - அந்நஞ்சை உமிழ்ந்து விட்டான்; என்றான் - என்று (இராவணன்) மொழிந்தான். இப்பாடல் உருவக அணி. 140 |