3210.'புடை கொண்டு எழு கொங்கையும்,
     அல்குலும், புல்கி நிற்கும்
இடை, கண்டிலம்; அல்லது எல்லா
     உருவும் தெரிந்தாம்;
விடம் நுங்கிய கண் உடையார் இவர்;
     மெல்ல மெல்ல,
மட மங்கையர் ஆய், என்
     மனத்தவர் ஆயினாரே.

    புடை கொண்டு எழு கொங்கையும் - பக்கங்களில் பொங்கி
எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலும் - அல்குலையும், புல்கி நிற்கும்
இடை கண்டிலம் -
இணைக்கின்ற இடை என் கண்களுக்குப்
புலனாகவில்லை; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் - அது தவிரப் பிற
உறுப்பெல்லாம் தெரிகின்றது; விடம் நுங்கிய கண்ணுடையார் - நஞ்சை
அருந்திய கண்கள் இவருக்கு அமைந்தன; மெல்ல மெல்ல - மெதுவாக;
மடமங்கையர் ஆய் - அழகிய இளம் பெண்ணாய்; இவர் என்
மனத்தவர் ஆயினார் -
இவர் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக்
கொண்டார். (ஏ - அசை)

     உருவெளித் தோற்றமாகையினால் சிறிது சிறிதாக உறுப்புக்கள் புலனாகி
ஒரு வடிவுற்றதாய்க் காட்டுகின்றார்.                               144