3211.'பண்டு ஏய் உலகு ஏழினும்
     உள்ள படைக்கணாரைக்
கண்டேன்; இவர் போல்வது
     ஓர் பெண் உருக் கண்டிலேனால்;
உண்டே எனின், வேறு இனி,
    எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள்
     இவள் ஆகும் அன்றே.

    பண்டு ஏய் உலகு ஏழினும் - முன்னமே ஏழு உலகங்களிலும்;
உள்ள படைக்கணாரைக் கண்டேன் - இருக்கும் மகளிரைப்
பார்த்துள்ளேன்; இவர் போல்வதோர் பெண் உருக் கண்டிலேன் -
அவர்களிடையே இவ் வடிவம் போல் ஓர் பெண் உருவை நான்
கண்டதில்லை; இனி வேறு உண்டே எனின் - உலகிலுள்ள
பெண்களிலிருந்து மாறுபட்டதே இவ்வுரு என்றால்; எங்கை உணர்த்தி
நின்ற -
என் தங்கை சூர்ப்பணகை குறித்துச் சொன்ன; வண்டு ஏறு
கோதை மடவாள் -
வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய இளநங்கை;
இவள் ஆகும் - இவளே ஆவாள். (அன்றே - தேற்றம்; ஆல் - அசை)

     படைக் கண்ணார் - அம்பு, வாள் போன்ற கண்களை உடைய
பெண்கள். இதுவரை காணாத அழகு என்பதால் சூர்ப்பணகை குறிப்பிட்டது
அவளேயாகும் இவள் எனக் கருதினான்.                          145