3212.'பூண்டு இப் பிணியால் உறுகின்றது,
     தான் பொறாதாள்,
தேண்டிக் கொடு வந்தனள்; செய்வது
     ஓர் மாறும் உண்டோ?
காண்டற்கு இனியாள் உருக்
     கண்டவட் கேட்கும் ஆற்றால்,
ஈண்டு, இப்பொழுதே, விரைந்து,
     எங்கையைக் கூவுக' என்றான்.

    (இவ்வாறு கருதிய இராவணன் மேலும் எண்ணலானான்) 'பூண்டு
இப்பிணியால் -
காதல் நோய் பொருந்தி அந்த நோயால்; உறுகின்றது
தான் பொறாதாள் -
(யான்) வருந்துவதை அறிந்து பொறாதவளாய்;
தேண்டிக் கொடு வந்தனள் - (சீதை) என்னைத் தேற்றும் பொருட்டுத்
தேடிக் கொண்டு வந்து விட்டாள்; செய்வது ஓர் மாறும் உண்டோ? -
யான் இவளுக்குச் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் உண்டா? (இல்லை);
காண்டற்கு இனியாள் - கண்டு களிக்க இனியவளான சீதையினது; உருக்
கண்டவள் -
வடிவத்தை நேரிற்கண்ட சூர்ப்பணகையை; கேட்கும்
ஆற்றால் -
வினவி உண்மை அறியும் பொருட்டு; ஈண்டு இப்பொழுதே -
இதோ இந்தக் கணமே; விரைந்து - விரைவாக; எங்கையைக் கூவுக'
என்றான் -
என் தங்கையை அழையுங்கள் என்று ஆணையிட்டான்.

     உருவெளித் தோற்றத்தைச் சீதையென மயங்கியவன் உண்மை அறியத்
தங்கையை அழைத்தான்.                                       146