3213. | என்றான் எனலும், கடிது ஏகினர் கூவும் எல்லை, வன் தாள் நிருதக் குலம் வேர்அற மாய்த்தல் செய்வாள், ஒன்றாத காமக் கனல் உள் தெறலோடும், நாசி, பொன் தாழ் குழைதன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள். |
என்றான் எனலும் - இவ்வாறு இராவணன் கட்டளையிட்டான் என்றதும்; (பணியாளர்); கடிது ஏகினர் கூவும் எல்லை - விரைந்து சென்று (சூர்ப்பணகையை) அழைத்த பொழுதில்; வன்தாள் நிருதக் குலம் - வலிய முயற்சியை உடைய அரக்கர் மரபை; வேர் அற மாய்த்தல் செய்வாள் - ஆணி வேரோடு அழிக்கப் பிறந்த அவள்; நாசி - மூக்கையும்; பொன்தாழ் குழை தன்னொடும் - பொன்னாலாகிய குழையணிந்த செவியையும்; போக்கினள் - பறி கொடுத்தவள்; ஒன்றாத காமக் கனல் - ஒரு தலையாய்ப் பிறந்த காம நெருப்பு; உள் தெறலோடும் - மனத்தை வருத்தும் நிலையில்; போய்ப் புகுந்தாள் - அங்கு வந்து சேர்ந்தாள். சேர்ந்தாரை அழிக்கும் நெருப்புப் போன்றது காமமென்பதால் காமக்கனல் என்றார். 147 |