3213. என்றான் எனலும், கடிது
     ஏகினர் கூவும் எல்லை,
வன் தாள் நிருதக் குலம்
     வேர்அற மாய்த்தல் செய்வாள்,
ஒன்றாத காமக் கனல்
     உள் தெறலோடும், நாசி,
பொன் தாழ் குழைதன்னொடும்
     போக்கினள் போய்ப் புகுந்தாள்.

    என்றான் எனலும் - இவ்வாறு இராவணன் கட்டளையிட்டான்
என்றதும்; (பணியாளர்); கடிது ஏகினர் கூவும் எல்லை - விரைந்து சென்று
(சூர்ப்பணகையை) அழைத்த பொழுதில்; வன்தாள் நிருதக் குலம் - வலிய
முயற்சியை உடைய அரக்கர் மரபை; வேர் அற மாய்த்தல் செய்வாள் -
ஆணி வேரோடு அழிக்கப் பிறந்த அவள்; நாசி - மூக்கையும்; பொன்தாழ்
குழை தன்னொடும் -
பொன்னாலாகிய குழையணிந்த செவியையும்;
போக்கினள் - பறி கொடுத்தவள்; ஒன்றாத காமக் கனல் - ஒரு
தலையாய்ப் பிறந்த காம நெருப்பு; உள் தெறலோடும் - மனத்தை
வருத்தும் நிலையில்; போய்ப் புகுந்தாள் - அங்கு வந்து சேர்ந்தாள்.

     சேர்ந்தாரை அழிக்கும் நெருப்புப் போன்றது காமமென்பதால்
காமக்கனல் என்றார்.                                         147