இராவணன் சூர்ப்பணகை உரையாடல்

3214.பொய்ந் நின்ற நெஞ்சின்
     கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய்ந் நின்ற கூர் வாளவன், 'நேர்
     உற நோக்கு; நங்காய்!
மைந் நின்ற வாள்-கண் மயில் நின்றென
     வந்து, என் முன்னர்
இந் நின்றவள் ஆம்கொல்,
     இயம்பிய சீதை?' என்றான்.

    நெய்ந் நின்ற கூர் வளாவன் - நறு நெய் பூசிய கூரிய வாளை
உடைய இராவணன்; பொய்ந்நின்ற நெஞ்சின் - பொய் குலவும் மனம்
உடைய; கொடியாள் புகுந்தாளை நோக்கி - கொடிய சூர்ப்பணகை அங்கு
வரவும், அவளைப் பார்த்து; நங்காய் - பெண்ணே!; நேர் உற நோக்கு -
நன்றாக உற்றுப்பார்; மைந் நின்ற வாள் கண் - அஞ்சன மை பூசிய ஒளி்
மிக்க கண்களோடு; மயில் நின்றென வந்து - ஒரு தோகை மயிலென முன்
வந்து; என் முன்னர் - எனக்கு எதிரில்; இந்நின்றவள் ஆம் கொல் -
இதோ நிற்கும் இவளே போலும்; இயம்பிய சீதை - நீ குறிப்பிட்ட சீதை;
என்றான் - என்று வினவினான்.

     இராவணன் மனத்தைக் காமம் கவ்விய நிலையில் உருவெளித்
தோற்றத்தை மெய்யாக நம்பி இங்ஙனம் தங்கையிடம் கேட்டான். அவளும்
அதே நிலையினள் என்பதை வரும் பாடல் உணர்த்தும்.     148