3216.'பெண்பால் உரு, நான், இது
     கண்டது; பேதை! நீ ஈண்டு,
எண்பாலும் இலாதது ஓர் ஆண்
     உரு என்றி; என்னே!
கண்பால் உறும் மாயை
     கவற்றுதல் கற்ற நம்மை,
மண்பாலெவரேகொல், விளைப்பவர்
     மாயை?' என்றான்.

    நான் கண்டது இது - நான் பார்த்த இவ்வடிவம்; பெண்பால் உரு -
பெண் வடிவமாகும்; பேதை - அறியாமை உடையவளே!; நீ ஈண்டு -
நீயோ இங்கு; எண்பாலும் இலாதது ஓர் - எண்ணத்தில் எங்கும்
கருதப்படாத ஒரு; ஆண் உரு என்றி - ஆண் வடிவம் என்று
கூறுகின்றாய்; என்னே - இது வியப்பாய் இருந்தது; கண்பால் உறும்
மாயை -
கண்கள் நம்பும்படியான மாயச் செய்கை; கவற்றுதல் கற்ற
நம்மை -
மயங்கும்படி செய்யவல்ல வித்தையாய்ப் பயின்ற நமக்கு;
மண்பால் - இவ்வுலகில்; மாயை விளைப்பவர் எவரே கொல் - மாயை
செய்தவர் யாராக இருக்கலாம்; என்றான் - என ஐயுற்று (இராவணன்)
மொழிந்தான்.

     மாயையில் வல்ல நம்மையும் ஏமாற்றும் மாயை உண்டோ என்றான்.
ஒருவர் பெண் என்ன, இன்னொருவர் ஆண் என்ன விளைந்த மயக்கத்தை
இவ்வாறு குறித்தான்.                                          150