3217.'ஊன்றும் உணர்வு அப்புறம்
     ஒன்றினும் ஓடல் இன்றி,
ஆன்றும் உளது ஆம் நெடிது
     ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று, உன் எதிரே, விழி
     நோக்கும் இடங்கள்தோறும்,
தோன்றும், அனையாள்; இது தொல்
     நெறித்து ஆகும்' என்றாள்.

    'ஊன்றும் உணர்வு - (சீதையின் பால்) பதிந்து போன அறிவு;
அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி - வேறு எதனினும் சென்று தங்காமல்;
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை - மிக வளர்ந்துவிட்ட பெரிய
காமம்; கனற்ற நின்றாய்க்கு - வெப்ப மூட்ட விளங்கும் உனக்கு; ஏன்று -
பொருந்தும்படி; உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும் - உன்
முன் கண்கள் பார்க்கும் இடமெல்லாம்; அனையாள் தோன்றும் - அவள்
உருவே தோன்றலாயிற்று; இது தொல் நெறித்து ஆகும் - இவ்வாறு
தோன்றுதல் பண்டு முதல் வழக்கமானது தான்; என்றாள் - என்று
சூர்ப்பணகை (சமாதானம்) கூறினாள்.

     தொல்நெறித்து ஆகும் என்று இராவணனுக்குச் சொன்ன சிறுமை
தனக்கும் உரியது என்பதைச் சூர்ப்பணகை உணராதது குறிக்கத்தக்கது.   151