3218. அன்னாள் அது கூற,
     அரக்கனும், 'அன்னது ஆக;
நின்னால் அவ் இராமனைக் காண்குறும்
     நீர் என்?' என்றான்;
'எந்நாள், அவன் என்னை இத் தீர்வு
     அரும் இன்னல் செய்தான்,
அந் நாள்முதல், யானும்
     அயர்த்திலென் ஆகும்' என்றாள்.

    அன்னாள் அது கூற - சூர்ப்பணகை இவ்வாறு கூறவும்; அரக்கனும்-
இராவணனும்; அன்னது அக - நீ கூறியதே உண்மை ஆகுக; (எனில்)
நின்னால் அவ் இராமனை - உன் கண்களில் அவ்விராமனை; காண்குறும்
நீர் என்? -
காணுகின்ற தன்மை நேர்ந்தது எவ்வாறு?'; என்றான் - என்று
கேட்டான் (அதற்கு அவள்); எந்நாள் அவன் என்னை - எப்பொழுது
அவ்விராமன் எனக்கு; இத்தீர்வு அரும் இன்னல் செய்தான் - இவ்வாறு
விலக்கலாகாத் தீமை செய்தானோ; அந்நாள் முதல் - அப்பொழுது
முதலாக; யானும் அயர்த்திலென் ஆகும் - நானும் அவனை
மறக்கவில்லை'; என்றாள் - என்று பதிலிறுத்தாள்.

     சீதையைத் தான் கண்டது ஆசையின் உரு வெளிப்பாடு என்றால்
சூர்ப்பணகை கண்ணில் இராமன் தோன்றியது ஏன் என்ற ஐயம்
இராவணனுக்கு எழுந்தது. சூர்ப்பணகை தன் காமத்தை ஒளித்து, அவனை
நினைத்தற்குக் காரணம் அவன் செய்த கொடுமை எனத் தந்திரமாய்
மொழிந்தாள்.                                               152