3219.'ஆம் ஆம்; அது அடுக்கும்; என்
     ஆக்கையொடு ஆவி நைய
வேமால்; வினையேற்கு இனி என்
     விடிவு ஆகும்?' என்ன,
'கோமான்! உலகுக்கு ஒரு நீ,
     குறைகின்றது என்னே?
பூ மாண் குழலாள்தனை வவ்வுதி,
     போதி' என்றாள்.

    'ஆம், ஆம் அது அடுக்கும் - உண்மை, உண்மை, நீ கூறியது
பொருந்தும்; என் ஆக்கையொடு ஆவி நைய - என் உடலும் உயிரும்
கலங்க; வேம் - வெந்து தவிக்கிறேன்; வினையேற்கு இனி என் விடிவு
ஆகும் -
கொடிய வினை செய்த எனக்கு இனி விடுதலை தான் யாது';
என்ன - என்று (இராவணன்) கேட்க; 'கோமான் - தலைவனே; உலகுக்கு
ஒரு நீ -
இவ்வுலகுக்கே ஒப்பற்ற முதல்வனான நீ; குறைகின்றது என்னே-
(இவ்வாறு) மனம் சிதைவது ஏனோ?; பூ மாண் குழலாள்தனை - பூக்கள்
பொலியும் கூந்தலை உடைய சீதையை; வவ்வுதி போதி - சென்று கவர்ந்து
வருவாயாக; என்றாள் - என (ஆலோசனை) கூறினாள் (ஆல் - அசை).

     சீதையை நினைந்து நோவதைவிட, அவளைக் கைப்பற்றிஅடைவாயாக
என்றாள் சூர்ப்பணகை.                                         153