3220. | என்றாள் அகன்றாள்; அவ் அரக்கனும் ஈடழிந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி உலைந்து சோர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர்; நின்றுள நாளினாலே பொன்றாது உளன் ஆயினன்; அத்துணைபோலும் அன்றே. |
என்றாள் அகன்றாள் - என்றுரைத்த சூர்ப்பணகை அவ்விடம் விட்டு நீங்கினாள்; அவ் அரக்கனும் - அவ் விராவணனும்; ஈடு அழிந்தான் - தன் சமநிலை குலைந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன் - எதனாலும் நல்லறிவு பெறாதவனாயினான்; ஆவி உலைந்து சோர்ந்தான் - உயிர் நிலைகுலைந்து தளர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர் - பணி செய்ய நின்றாரும் அச்சம் கொண்டனர்; நின்றுள நாளினாலே - மிச்சம் இருக்கிற ஆயுட் காலத்தால்; பொன்றாது உளன் ஆயினன் - சாகாது பிழைத்திருப்பான் ஆனான்; அத்துணை போலும் அன்றே - அவ்வளவே அவன் நிலை எனல் ஆயிற்று அன்றோ? அவன் உயிர் இழவாதிருந்தது ஆயுள் பலத்தால் மட்டுமே என்றார். 154 |