3220. என்றாள் அகன்றாள்; அவ்
     அரக்கனும் ஈடழிந்தான்;
ஒன்றானும் உணர்ந்திலன்; ஆவி
     உலைந்து சோர்ந்தான்;
நின்றாரும் நடுங்கினர்;
     நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன்;
     அத்துணைபோலும் அன்றே.

    என்றாள் அகன்றாள் - என்றுரைத்த சூர்ப்பணகை அவ்விடம் விட்டு
நீங்கினாள்; அவ் அரக்கனும் - அவ் விராவணனும்; ஈடு அழிந்தான் -
தன் சமநிலை குலைந்தான்; ஒன்றானும் உணர்ந்திலன் - எதனாலும்
நல்லறிவு பெறாதவனாயினான்; ஆவி உலைந்து சோர்ந்தான் - உயிர்
நிலைகுலைந்து தளர்ந்தான்; நின்றாரும் நடுங்கினர் - பணி செய்ய
நின்றாரும் அச்சம் கொண்டனர்; நின்றுள நாளினாலே - மிச்சம் இருக்கிற
ஆயுட் காலத்தால்; பொன்றாது உளன் ஆயினன் - சாகாது
பிழைத்திருப்பான் ஆனான்; அத்துணை போலும் அன்றே - அவ்வளவே
அவன் நிலை எனல் ஆயிற்று அன்றோ?

     அவன் உயிர் இழவாதிருந்தது ஆயுள் பலத்தால் மட்டுமே என்றார். 154