சந்திரகாந்த மண்டபம் அமைத்துத் தங்குதல்

3221.'இறந்தார் பிறந்தார்' என,
     இன் உயிர் பெற்ற மன்னன்,
மறம் தான் உணர்ந்தான், அவண்,
     மாடு நின்றாரை நோக்கி,
' "கறந்தால் என நீர் தரு
     சந்திரகாந்தத்தாலே,
சிறந்து ஆர் மணி மண்டபம்
     செய்க" எனச் செப்புக' என்றான்.

    இறந்தார் பிறந்தார் என - மரணமுற்றவன் மீண்டும் பிறந்தான்
எனும்படியாய்; இன் உயிர் பெற்ற மன்னன் - தன் இனிய உயிரைப் பெற்ற
இராவணன்; மறம் தான் உணர்ந்தான் - தன் வலிமையை உணர்ந்து
கொண்டவனாய்; அவண் மாடு நின்றாரை நோக்கி - அங்குப் பக்கத்தில்
இருந்தவர்களைப் பார்த்து; "கறந்தால் என - பால் கறந்தால் சுரப்பது
போன்று; நீர்தரு சந்திர காந்தத்தாலே - நீர் சுரப்பதாகிய சந்திர காந்தம்
என்னும் கற்களாலே; சிறந்து ஆர் மணிமண்டபம் - சிறந்து விளங்கும்
எழில் மிகு மணி மண்டபம் ஒன்றை; செய்க என - சமைக்க வேண்டும்'
என; செப்புக என்றான் - சிற்பக் கலைஞரிடம் கூறுங்கள்" எனப்
பணித்தான்.

     சந்திரகாந்தம் - சந்திர கிரணம் பட்டதும் நீர் சொரியும் ஒரு
வகைக்கல் சந்திர காந்தக் கல்லாலாகிய கட்டடம் பற்றி முன்னும் (122)
கம்பர் குறித்திருக்கிறார். குளிர்ச்சியை நாடி இவ்வாறு கூறினான். செப்புக
என்றது தெய்வச் சிற்பியைக் கருதிக் கூறியது.                       155