3223. | காந்தம், அமுதின் துளி கால்வன, கால மீனின் வேந்தன் ஒளி அன்றியும், மேலொடு கீழ் விரித்தான்; பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான்; ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான். |
கால மீனின் வேந்தன் - விண்மீன்களின் தலைவனாகிய சந்திரன்; ஒளி அன்றியும் அமுதின் துளி கால்வன - ஒளி படராத போதும் அமுத நீரின் துளிகள் சிதறுவனவாகிய; காந்தம் மேலொடு கீழ் விரித்தான் - சந்திர காந்தக் கற்களை மேலிருந்து கீழ் வரை அமைத்தான்; பூந் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் - பூ மணக்கும் தென்றல் காற்று உள்ளே வரும்படியாகப் பலகணிகளும் உருவாக்கினான்; ஏந்தும் மணிக் கற்பக - விரும்பியவற்றை ஏந்தி அளிக்கும் மாணிக்கம் திகழும் கற்பக மரங்களின்; சீதளக் கா இழைத்தான் - குளிர்ச்சியான சோலையையும் உடன் அமைத்து வைத்தான் (விசுவகர்மா). சந்திர கிரணம் படாத போதும் நீர் சுரக்கும் சந்திர காந்தம் என்ற சிறப்புமிக்க கற்களால் மண்டபம் அமைந்தது என வனப்பினை உயர்த்திக் கூறினார். 157 |