3224. ஆணிக்கு அமை பொன் கை, மணிச்
     சுடர் ஆர் விளக்கம்
சேண் உற்ற இருள் சீப்ப, அத்
     தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட,
     பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம்
     காண வந்தான்.

    ஆணிக்கு அமை பொன் கை - ஆணிப் பொன் அணிகலன்கள்
அணிந்த கரத்தில்; மணிச் சுடர் ஆர் விளக்கம் - ஒளிச் சுடர் பொருந்திய
விளக்குகளை எந்தி; பூணின் பொலிவார் - நகைகளை அழகுற
அணிந்தவரான; அத் தெய்வ மடந்தை மார்கள் - அந்தத்
தேவமங்கையர்; புடை ஏந்திட - இருபுறமும் எடுத்து வர; சேண் உற்ற
இருள் சீப்ப -
வான்முழுதும் செறிந்த இருள் சிதறி ஓட; பொங்கு
தோளான் -
விம்மிய (இருபது) தோள்களை உடைய இராவணன்; மாணிக்க
மானத்திடை -
ஒரு மாணிக்க விமானம் ஏறி; மண்டபம் காண வந்தான் -
அம்மணி மண்டபம் காண வருகை தந்தான்.

     தேவ மகளிர் மணி விளக்கெடுப்ப, இராவணன் மாணிக்க விமானத்தில்
மணி மண்டபம் காண வந்தான்.                                 158