3226. | பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற கற்பத் தருவின் கதிர் நாள் நிழற் கற்றை நாற, அல் பற்று அழிய, பகல் ஆக்கியதால் - அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ? |
பொற்பு உற்றன ஆய் - அழகு பொருந்தியனவாய்; கற்பத் தருவின் பூவில் நின்ற - கற்பக மரத்தின் பூக்களாய்ப் பொருந்திய; மணி ஒன்பதும் - நவரத்தினங்களும்; கதிர் நாள் நிழல் கற்றை நாற - கதிரவனின் பகற்கால ஒளிக்கிரணங்கள் போல் தோன்ற; அல் பற்று அழிய - இருளின் பிடிப்புச் சிதையும்படி; பகல் ஆக்கியது - பகற் பொழுதை உருவாக்கியது; அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது - சூரியன் மறைந்து நிற்கவும் ஒளியானது வீசிக் கொண்டிருப்பது; நீள் சுடர் மேன்மை அன்றோ - கற்பக மரங்களிலிருந்து பெருகும் ஒளியின் சிறப்பு அல்லவா? கற்பக மரங்களின் பூக்கள் தரும் ஒளியை வியந்தவாறாம். கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம் என்பன நவமணிகள். 160 |