3226.பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும்
    பூவில் நின்ற
கற்பத் தருவின் கதிர் நாள்
     நிழற் கற்றை நாற,
அல் பற்று அழிய, பகல்
     ஆக்கியதால் - அருக்கன்
நிற்பத் தெரிக்கின்றது நீள் சுடர்
     மேன்மை அன்றோ?

    பொற்பு உற்றன ஆய் - அழகு பொருந்தியனவாய்; கற்பத் தருவின்
பூவில் நின்ற -
கற்பக மரத்தின் பூக்களாய்ப் பொருந்திய; மணி ஒன்பதும்
-
நவரத்தினங்களும்; கதிர் நாள் நிழல் கற்றை நாற - கதிரவனின்
பகற்கால ஒளிக்கிரணங்கள் போல் தோன்ற; அல் பற்று அழிய - இருளின்
பிடிப்புச் சிதையும்படி; பகல் ஆக்கியது - பகற் பொழுதை உருவாக்கியது;
அருக்கன் நிற்பத் தெரிக்கின்றது - சூரியன் மறைந்து நிற்கவும்
ஒளியானது வீசிக் கொண்டிருப்பது; நீள் சுடர் மேன்மை அன்றோ -
கற்பக மரங்களிலிருந்து பெருகும் ஒளியின் சிறப்பு அல்லவா?

     கற்பக மரங்களின் பூக்கள் தரும் ஒளியை வியந்தவாறாம்.
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், முத்து, மாணிக்கம்,
வைரம், வைடூரியம் என்பன நவமணிகள்.                          160