3227. | ஊறு, ஓசை, முதல் பொறி யாவையும், ஒன்றின் ஒன்று தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன்; செய்கை ஓரான்; வேறு ஆய பிறப்பிடை, வேட்கை விசித்தது ஈர்ப்ப, மாறு ஓர் உடல் புக்கென, மண்டபம் வந்து புக்கான். |
ஊறு - தொடுதல்; ஓசை - கேட்டல்; முதற் பொறியாவையும் - முதலான உணர்வு தரும் ஐம் பொறிகளும்; ஒன்றின் ஒன்று தேறா நிலை- ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து உணர முடியாத நிலையினை; உற்றதோர் சிந்தையன் - அடைந்த குழப்ப மனம் படைத்தவன்; செய்கை ஓரான் - இன்னது செய்வதென விளங்காத இராவணன்; வேட்கை விசித்தது ஈர்ப்ப - ஆசை பற்றி இழுத்து வர; வேறு ஆய பிறப்பிடை - மற்றொரு பிறவி எடுத்து (அப்பிறப்பில்); மாறு ஓர் உடல் புக்கென - இன்னொரு உடல் கொண்டு வந்தவன் போல்; மண்டபம் வந்து புக்கான் - சந்திர காந்த மண்டபம் அடைந்தான். ஐம்பொறி உணர்வுகளும் நிலைகுலைந்தமையால் ஆற்றல் மிக்க இராவணன் வேறொரு பிறவி எடுத்தவன் போல் வலிமையிழந்து காட்சி தந்தான். 161 |