அறுசீர் ஆசிரிய விருத்தம்

3228. தண்டல் இல் தவம் செய்வோர்,
     தாம் வேண்டிய, தாயின் நல்கும்
மண்டல மகர வேலை
     அமுதொடும் வந்ததென்ன,
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம்
      உயிர்த்த பைம் பொன்
தண் தளிர் மலரின் செய்த சீதளச்
     சேர்க்கை சார்ந்தான்.

    தண்டல் இல் தவம் செய்வோர் - விருப்பம் அழித்துத் தவம்
புரிந்த தேவர்கள்; தாம் வேண்டிய தாயின் நல்கும் - எதனை
விரும்பினாலும் தாயைப் போல் வழங்குகின்ற; மண்டல மகர வேலை -
மகர மீன்கள் உலாவும் வட்ட வடிவமான பாற்கடல்; அமுதொடும் வந்தது
என்ன -
அமுத கலசத்தோடு வந்தாற்போல; பண்தரு சுரும்பு சேரும் -
இசை பாடும் வண்டுகள் மொய்க்கும்; பசுமரம் உயிர்த்த- பச்சை மரங்களில்
பிறந்த; பைம்பொன் தண்டளிர் - பொன்னிற இளந் தளிர்களாலும்; மலரின்
செய்த -
மலர்களாலும் சமைத்த; சீதளச் சேர்க்கை - குளிர்ச்சியான
படுக்கை அமைந்திருக்க; சார்ந்தான் - (அதனை இராவணன்) அடைந்தான்.

     அமுதப் பாற்கடல் போன்றிருந்த பூந்தளிர்ப் படுக்கை, தவம் பலனை
எதிர் நோக்காது செய்யப்படுவது. ஆயினும் எதனையும் தரவல்லது.
இதனைத் 'கண்டல் இல் தவம்' என்றார்.                           162