3230.சாளரத்தூடு வந்து தவழ்தலும்,
     தரித்தல் தேற்றான்;
நீள் அரத்தங்கள் சிந்தி, நெருப்பு
     உக, நோக்கும் நீரான்;
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர்
     மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி,
     உழையரைக் கூவிச் சொன்னான்:

    நீள் அரத்தங்கள் சிந்தி - நெடிய இரத்தத் துளிகள் சிந்தி; நெருப்பு
உக -
தீப்பொறிகளும் கக்கும்படி; நோக்கும் நீரான்- சினமுடன் பார்க்கும்
கண்கள் கொண்ட இராவணன்; சாளரத்தூடு வந்து தவழ்தலும் -
(தென்றல்) பலகணி வழியே வந்து பாயவும்; தரித்தல் தேற்றான் -
பொறுக்க இயலாதவனாய் ஆனான்; வாழ்மனை ஆண்டு - வாழும்
இல்லத்தின்கண்; ஓர் மாகணம் புகுந்தது வரக் கண்டன்ன - ஒரு மலைப்
பாம்பு நுழைந்து வரக் கண்டது போல்; கோள் உறக் கொதித்து - துன்பம்
கொண்டு சினமுற்று; விம்மி - கலங்கி; உழையரைக் கூவிச் சொன்னான்-
பணியாளரைக் கூப்பிட்டுப் பின் வருமாறு கூறினான்.

     மலையினின்று வரும் மலய மாருதமான தென்றலை மலைப் பாம்பாகக்
குறிப்பிட்டார். தென்றல் என்றதற்கேற்ப அதன் அசைவினைத் தவழ்தல்
என்றார்.                                                    164