3231. | 'கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்றென்ன, தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ? ஏவலின் அன்றி, தென்றல் எவ் வழி எய்திற்று' என்னா, 'காவலின் உழையர்தம்மைக் கொணருதிர் கடிதின்' என்றான். |
கூவலின் உயிர்த்த சில் நீர் - கிணற்றில் தோன்றிய சிறிதளவு தண்ணீர்; உலகினைக் குப்புற்றென்ன - உலகத்தை மூழ்கடித்தது என்றாற் போல; தேவரில் ஒருவன் - (எனக்கு ஆட்பட்ட) தேவரில் ஒருவனாகிய வாயு; என்னை இன்னலும் செயத் தக்கானோ - எனக்கே தீமையும் செய்ய வல்லவன் ஆகிவிட்டானோ; ஏவலின் அன்றி - என் கட்டளையின்றி; தென்றல் எவ்வழி எய்திற்று - எவ்வாறு தென்றல் இங்கு வந்தது; என்னா - என்று (இராவணன்) வினவி; காவலின் உழையர் தம்மை - காவல் பணியாளர்களை; கடிதின் கொணருதிர் - விரைவாக அழையுங்கள்; என்றான் - எனக் கூறினான். கிணற்று நீர் உலகை மூழ்கடித்தாற் போல ஒரு தேவன் எனக்கு இன்னல் செய்தான் என்று ஏளனமாய் உரைத்தான் இராவணன். 165 |