3232. அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு
     அவர்க் கொணர்தலோடும்,
வெவ் வழி அமைந்த செங் கண்
     வெருவுற நோக்கி, வெய்யோன்,
'செவ் வழி, தென்றலோற்குத் திருத்தினிர்
     நீர்கொல்?' என்ன,
'இவ்வழி இருந்த காலைத் தடை
     அவற்கு இல்லை' என்றார்.

    அவ்வழி - அது கேட்ட பொழுதில்; உழையர் - பணியாளர்; ஓடி -
ஓட்டமாய்ச் சென்று; ஆண்டு அவர்க் கொணர்தலோடும் - அங்கு அக்
காவலாளரை அழைத்து வரவும்; வெவ் வழி அமைந்த செங்கண்
வெருவுற நோக்கி -
கொடுமை நிறைந்த சிவந்த கண்களால் (அக்காவலர்)
அஞ்சும்படி நோக்கி; வெய்யோன் - கோபம் மிக்கவனாகிய இராவணன்;
தென்றலோற்கு - தென்றல் காற்றுக்கு; செவ்வழி திருத்தினிர் நீர் கொல்
-
நன்கு வழி அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் தாமோ; என்ன - என்று
(சின) வினா எழுப்பியதும்; 'இவ்வழி இருந்த காலை - தாங்கள் இவண்
எழுந்தருளும் பொழுதில்; தடை அவற்கு இல்லை - தென்றல் வரலாகாது
என்ற தடை உத்தரவு இல்லை'; என்றார் - என்று (பணிமொழி) பகர்ந்தனர்.

     வாயிலை நாங்கள் காவல் காக்கிறோம். சன்னல் வழியே வருவதைத்
தடுத்தோம் இல்லை எனக் கூறலுமாம்.                           166