3232. | அவ் வழி, உழையர் ஓடி, ஆண்டு அவர்க் கொணர்தலோடும், வெவ் வழி அமைந்த செங் கண் வெருவுற நோக்கி, வெய்யோன், 'செவ் வழி, தென்றலோற்குத் திருத்தினிர் நீர்கொல்?' என்ன, 'இவ்வழி இருந்த காலைத் தடை அவற்கு இல்லை' என்றார். |
அவ்வழி - அது கேட்ட பொழுதில்; உழையர் - பணியாளர்; ஓடி - ஓட்டமாய்ச் சென்று; ஆண்டு அவர்க் கொணர்தலோடும் - அங்கு அக் காவலாளரை அழைத்து வரவும்; வெவ் வழி அமைந்த செங்கண் வெருவுற நோக்கி - கொடுமை நிறைந்த சிவந்த கண்களால் (அக்காவலர்) அஞ்சும்படி நோக்கி; வெய்யோன் - கோபம் மிக்கவனாகிய இராவணன்; தென்றலோற்கு - தென்றல் காற்றுக்கு; செவ்வழி திருத்தினிர் நீர் கொல் - நன்கு வழி அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் தாமோ; என்ன - என்று (சின) வினா எழுப்பியதும்; 'இவ்வழி இருந்த காலை - தாங்கள் இவண் எழுந்தருளும் பொழுதில்; தடை அவற்கு இல்லை - தென்றல் வரலாகாது என்ற தடை உத்தரவு இல்லை'; என்றார் - என்று (பணிமொழி) பகர்ந்தனர். வாயிலை நாங்கள் காவல் காக்கிறோம். சன்னல் வழியே வருவதைத் தடுத்தோம் இல்லை எனக் கூறலுமாம். 166 |