3233. | 'வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால், மாண்டது போலும் கொள்கை, யானுடை வன்மை? வல்லைத் தேண்டி நீர் திசைகள்தோறும் சேணுற விசையில் செல்குற்று ஈண்டு இவன் தன்னைப் பற்றி, இருஞ்சிறை இடுதிர்' என்றான். |
வேண்டிய நினைந்து செய்வான் - தாங்கள் விரும்பியவாறு எண்ணிச் செயல்பட; விண்ணவர் வருவது என்றால் - தேவர்கள் வருவார்கள் என்றால்; யானுடை வன்மைக் கொள்கை - என்னுடைய ஆற்றற் கோட்பாடு; மாண்டது போலும் - அழிந்து போனது போலும்; வல்லைத் தேண்டி - விரைவாக எங்கும் தேடி; திசைகள் தோறும் - எட்டுத்திசைகளிலும்; வேணுற விசையில் செல்குற்று - தொலை தூரங்களிலும் வேகமாய்ச் சென்று; இவன் தன்னைப் பற்றி - வாயு தேவனைப் பிடித்து; நீர் - நீங்கள்; ஈண்டு இருஞ்சிறை இடுதிர் - இங்கே பெருஞ்சிறைச் சாலையில் தள்ளுமின்; என்றான் - என்று இராவணன் மொழிந்தான். காற்றைப் பிடித்துக் கடுஞ்சிறையில் இட இராவணன் ஆணையிட்டான். 167 |