3235. | ஏவின சிலதர் ஓடி, 'ஏ' எனும் துணையில், எங்கும் கூவினர்; கூவலோடும் குறுகினர் - கொடித் திண் தேர்மேல், மாவினில், சிவிகை தன்மேல், மழை மதக் களிற்றின் - வையத் தேவரும், வானம் தன்னில் தேவரும், சிந்தை சிந்த. |
ஏவின சிலதர் ஓடி - கட்டளையைப் பெற்ற பணியாளர் விரைந்து; ஏ எனும் துணையில் - ஏ எனும் முன்னர்; எங்கும் கூவினர் - எங்கணும் சென்று அமைச்சரை அழைத்தனர்; கூவலோடும் - அவ்வாறு அழைத்ததும்; வையத் தேவரும் - உலகின் கண் உள்ள முனிவரும்; வானம் தன்னில் தேவரும் - விண்ணுலகத் தேவரும்; சிந்தை சிந்த - மனம் துணுக்குற; (அமைச்சர்கள் எல்லாம்); கொடித் திண் தேர் மேல் - கொடி அசையும் வலிய தேர்கள் மேலும்; மாவினில் - குதிரைகள் மேலும்; சிவிகை தன் மேல் - பல்லக்குகளின் மேலும்; மழை மதக் களிற்றில் - மழையென மதம் பொழியும் யானைகள் மேலும் (பயணம் செய்து); குறுகினர்- இராவணனை அடைந்தனர். இராவணன் ஆணையின் வலிமையும், அமைச்சர் அறிவின் வலிமையும் சேர்ந்தால் ஏதாகுமோ எனத் தேவரும் முனிவரும் அஞ்சினர். 169 |