'வந்த கருத்து என்?' என, மாரீசன் வினவுதல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3237. | இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும், பொருந்திய பயத்தன், சிந்தை பொருமுற்று வெருவுகின்றான், கருந் தட மலைஅன்னானை எதிர்கொண்டு, கடன்கள் யாவும் திருந்திய செய்து, செவ்வித் திருமுகம் நோக்கிச் செப்பும்: |
அந்த இராவணன் எய்தலோடும் - அந்த (அரக்கர் தலைவன்) இராவணன் சென்று சேர்ந்தவுடன்; இருந்த மாரீசன் - அங்கிருந்த மாரீசன்; பொருந்திய பயத்தன் - அச்சம் அடைந்தவனாய்; சிந்தை பொருமுற்று - மனம் வெதும்பி; வெருவுகின்றான் - கலக்கம் அடைந்தவனாய்; கருந்தட மலை அன்னானை - கரிய பெரிய மலை போன்ற இராவணனை; எதிர் கொண்டு - முன் சென்று வரவேற்று; கடன்கள் யாவும் திருந்திய செய்து - சிறப்பான முறையில் உபசரணைகள் ஆற்றி; செவ்வித் திருமுகம் நோக்கி - பொலிவு மிக்க இராவணன் முகம் பார்த்து; செப்பும் - பேசத் தொடங்கினான். தவநெறி மேற்கொண்டிருந்த மாரீசனுக்கு இராவணன் தனித்த வருகை மனத்தில் அச்சத்தை மூட்டியது. 1 |