கலிநிலைத் துறை

3238.'சந்த மலர்த் தண் கற்பக
     நீழல் தலைவற்கும்,
அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும்
     அரசு ஆள்வாய்!
இந்த வனத்து, என் இன்னல்
     இருக்கைக்கு, எளியோரின்
வந்த கருத்து என்? சொல்லுதி'
     என்றான்-மருள்கின்றான்.

    மருள்கின்றான் - (எதற்காக இராவணன் வந்தானோ என)
மயங்குகின்ற மாரீசன்; சந்த மலர்த்தண் - அழகிய குளிர்ந்த மலர்களை
உடைய; கற்பக நீழல் தலைவற்கும் - கற்பக மர நிழலில் அரசாளும்
இந்திரனுக்கும்; அந்தகனுக்கும் - எமனுக்கும்; அஞ்ச - அச்சம் வரும்படி;
அடுக்கும் அரசாள்வாய் - மேல் நெருங்கி அரசாட்சி புரிபவனே; இந்த
வனத்து -
இந்தக் காட்டுக்குள்; என் இன்னல் இருக்கைக்கு - என்
துன்பம் மிக்க குடியிருப்பை நாடி; எளியோரின் - யாருமற்ற எளியோரைப்
போல; வந்த கருத்து என் - நீ வந்ததன் நோக்கம் யாது?; சொல்லுதி
என்றான் -
எடுத்துரைப்பாயாக' என்று கூறினான்.

     தன் குடியிருப்பை இன்னல் இருக்கை என்றது, காட்டுக்குள் வசதி
இல்லாத தவச்சாலை என்பது பற்றி. இந்திரனையும் அந்தகனையும்
இணைத்துக் கூறியது, இராவணனின் தலைமையையும், அழிக்கும் திறனையும்
இணைத்துக் கூறியவாறாம்.                                       2