இராவணன் சீதையைக் கவரத் துணையாகுமாறு வேண்டுதல் 3239. | 'ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன், அயர்கின்றேன்; போனது, பொற்பும்; மேன்மையும் அற்றேன், புகழோடும்; யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி?' என்னா, 'வானவருக்கும் நாண அடுக்கும் வசை மன்னோ?' |
அனைத்தும் ஆனது - (நிகழ வேண்டாதன) பலவும் நிகழ்ந்து விட்டன; ஆவி தரித்தேன் - எனினும் உயிர் பிழைத்திருந்தேன்; அயர் கின்றேன் - இன்னும் தளர்ச்சியுறுகின்றேன்; பொற்பும் போனது - என் பொலிவும் நீங்கியது; புகழோடும் மேன்மையும் அற்றேன் - என் பெருமைகளும், புகழும் அகன்றன; யான் இன்று உனக்கு - நான் இப்போது உன் பால்; இனி அது எங்ஙன் உரைக்கேன் - இனி அது பற்றி எவ்வாறு எடுத்துச் சொல்வேன்?; என்னா - என்று கூறி; வானவருக்கும் - தேவர்களுக்கும்; நாண அடுக்கும் வசை - வெட்கம் ஏற்படுத்தும் இழிவு அது என்றான். (மன்னோ - அசை). மாரீசனின் அன்பைப் பெறும் பொருட்டுத் தன் நிலையை இவ்வாறு தாழ்த்தித் தெரிவித்தான், இராவணன் 3 |