3240. | 'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று அங்கு, அவர் வாளால் நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்; என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர் புன்மை, தெரிப்பின், வேறு இனி எற்றே? புகல்-வேலோய்! |
வேலோய் - வேலேந்தியவனே; மானிடர் வன்மை தரித்தோர் - மனிதர்கள் வல்லமை உடையோர் ஆயினார்; மற்று அங்கு அவர் - மேலும் அக்கானகத்தில் அவர்கள்; வாளால் - தம் வாள் வலிமையால்; நின் மருகிக்கும் - உன் மருமகள் முறைமை வாய்ந்த சூர்ப்பணகைக்கும்; நாசி இழக்கும் நிலை - மூக்கை இழக்கின்ற நிலையினை; நேர்ந்தார் - உண்டு பண்ணிவிட்டனர்; தெரிப்பின் - ஆய்ந்து பார்த்தால்; என் மரபுக்கும் - என் பரம்பரைக்கும்; நின் மரபுக்கும் - (எனக்கு உறவாகிய) உன் பரம்பரைக்கும்; இதன் மேல் ஓர் புன்மை - இதனைக் காட்டிலும் ஒரு பேரிழிவு; இனி வேறு எற்றே - இனி வேறு என்ன இருக்கிறது; புகல்- சொல்லுவாயாக. மானுடர் என இராமலக்குவரைக் குறித்தான். மாரீசன் மாமன் முறை என்பதால் சூர்ப்பணகையை மருகி என்றான். 4 |