3244. | 'மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய்; உன்னால் அன்று ஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்; இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம்' என்னா, சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம். |
'மன்னா - வேந்தனே; நீ உன் வாழ்வை முடித்தாய் - நீ உன் வாழ்க்கைக்கு முடிவு தேடிக் கொண்டாய்; மதியற்றாய் - அறிவை அழித்து விட்டாய்; உன்னால் அன்று ஈது - இந்நிலை உன்னால் உண்டானதல்ல; ஊழ்வினை என்றே உணர்கின்றேன் - விதியின் வலியென்றே கருதுகின்றேன்; இன்னா வேனும் - உனக்கு இனிமையான வையல்லவெனினும்; யான் இது இதம் உரைப்பென் - நான் இதனை உனக்கு நலம் கருதிக் கூறுவேன்; என்னா - என, (மாரீசன்); அன்னவனுக்கு - இராவணனுக்கு; துணிவு எல்லாம் - உறுதிப் பொருள்கள் எல்லாம்; சொன்னான் - கூறலானான் (அன்றே - தேற்றம்) இராவணனின் தவறான மனநிலைக்கு விதிதான் காரணமென உணர்ந்து கூறினான் மாரீசன். ஆவது அறிவதே அறிவு; இராவணன் அழிவுக்கு வழி தேடுவதால் 'மதியற்றாய்' என்றான். 8 |