3247.'நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
     நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று
     ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார், என்ற
     இவர்தம்மைத் தருமம்தான்
ஈரும் கண்டாய்; கண்டகர்
     உய்ந்தார் எவர்? ஐயா!

    'நாரம் கொண்டார் - அன்பு பூண்டாரது; நாடு கவர்ந்தார் -
நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும்; நடை அல்லா - நீதி நெறிக்குப்
பொருந்தாத; வாரம் கொண்டார் - வரிப் பொருளை (க் குடிமக்களை
வருத்திப்) பெற்றவர்களும்; மற்றொருவற்காய் - பிறர் ஒருவருக்கு
உரிமையாய்; மனை வாழும் தாரம் கொண்டார் - அவர் இல்லத்திலே
வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவரும்; என்றிவர் தம்மை -
எனப்படும் இவர்களை; தருமம் தான் - அறக் கடவுள்தானே; ஈரும்
கண்டாய் -
(சின்னா பின்னமாக்கி) அழித்து விடுவான் என அறிவாய்;
ஐயா - தலைவனே; கண்டகர் உய்ந்தார் எவர் - கொடியவருள் எவர்
தப்பிப் பிழைத்துள்ளார்?' (எவரும் இல்லை).

     பிறன் மனை விழைவோர். அன்புடையோரின் நாடு கவர்ந்தோர்,
கொடிய வரி வாங்குவோர் மூவரையும் கண்டகர் என ஓரினப்படுத்தினான்.
கண்டகர் - முள் போல் பிறரைத் துன்புறுத்துவோர்.                11