3249. | 'செய்தாயேனும், தீவினையோடும் பழி அல்லால் எய்தாது, எய்தாது; எய்தின், இராமன், உலகு ஈன்றான், வைதால் அன்ன வாளிகள் கொண்டு, உன் வழியோடும் கொய்தான் அன்றே, கொற்றம் முடித்து, உன் குழு எல்லாம்? |
'செய்தாயேனும் - (என் கருத்தை மீறி) நீ செயல்பட்டாலும்; தீ வினையோடும் பழி அல்லால் - பாவமும் பழியும் அன்றி (வேறு நன்மை); எய்தாது எய்தாது - உனக்கு நிச்சயம் கிடைக்காது; எய்தின் - ஒருவேளை உன் எண்ணப்படி (சீதையைச் சிறைபிடிப்பதில் வெற்றி பெற்றாலும்; உலகு ஈன்றான் இராமன் - உலகையெல்லாம் படைத்தளிக்கும் இராமபிரான்; வைதால் அன்ன வாளிகள் கொண்டு - (முனிவர்) சாபம் போன்ற கூரிய அம்புகளால்; உன்குழு எல்லாம் - உன் இனம் முழுவதையும்; உன் வழியோடும் - உன் சந்ததிகளோடும் சேர்த்து; கொற்றம் முடித்து - உங்கள் வெற்றி (வரலாறு) முடித்து; கொய்தான் அன்றே - நிச்சயமாய் அழித்துவிடுவான். பாவம் மறுமையையும், பழி இம்மையையும் அழிக்கும் என்பது கருத்து. உன்னால் உன் குலமும் அழியும் என எச்சரித்தான். வைதாலன்ன வாளிகள் - பால காண்டம் தாடகை வதைப் படலத்தில், 'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்' (378) என்பதனோடு ஒப்பு நோக்கத்தக்கது. எய்தாது, எய்தாது - அடுக்கு, உறுதியை வலியுறுத்தியது. நிகழ்ந்தே தீருமென்ற உறுதியால் கொய்தான் என்று இறந்த காலத்தில் குறித்தான்; கால வழுவமைதி. 13 |