3250.'என்றால், என்னே! எண்ணலையே நீ,
    கரன் என்பான்,
நின் தானைக்கு மேல் உளன் என்னும்
     நிலை? அம்மா!
தன் தானைத் திண் தேரொடும்
     மாளத் தனு ஒன்றால்
கொன்றான்; முற்றும் கொல்ல,
     மனத்தில் குறிகொண்டான்.

    என்றால் - இவ்வாறு நான் அறிவுரை கூறினாலும்; என்னே நீ
எண்ணலையே -
ஏனோ நீ சிந்தித்துப் பார்க்க மறுக்கின்றாயே; நின்
தானைக்கு மேல் என்னும் நிலை உளன் -
உன் படைகளுக்குத்
தலைவனாக உயர் நிலையில் இருந்த; கரன் என்பான் - கரன் என்னும்
வீரன்; தன் தானை - தன் சேனைகளோடும்; திண் தேரொடும் மாள -
வலிமை மிக்க தேர்ப் படைகளோடும் அழியும்படி; தனு ஒன்றால்
கொன்றான் -
ஒப்பற்ற தன் வில்லால் கொன்ற இராமன்; முற்றும் கொல்ல-
அரக்கர் இனம் முழுதையும் அழிக்க; மனத்தில் குறி கொண்டான் -
இப்போது மனத்திற் கருதி இருக்கின்றான்; அம்மா - இந்நிலை
இரங்கத்தக்கது.

     கரன் முதலியோரை அழித்தமை அவன் 'கூட்டு ஒருவரையும்
வேண்டாக் கொற்றவன்' என்பதைக் காட்டும். அவ்வாறிருந்தும் நீ அறிவு
பெற்றாய் இல்லை என்றான் மாரீசன்.                              14