3251.'வெய்யோர் யாரே, வீர விராதன்
     துணை வெய்யோர்?
ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு
அவன் என்றால்,
உய்வார் யாரே நம்மில் எனக்
     கொண்டு, உணர்தோறும்,
நையாநின்றேன்; நீ இது
     உரைத்து நலிவாயோ?

    வெய்யோர் - கொடியவர்களில்; வீர விராதன் துணை வெய்யோர்-
வீரனாகிய விராதனுக்கு இணையான கொடியவர்; யாரே - யார் உளர்?;
அம்பொடும் - (இராமபிரான்) அம்பினால்; ஐயோ - என்ன பரிதாபம்!;
உம்பர்க்கு அவன் போனான் என்றால் - வானுலகுக்கு அவனும்
கொல்லப்பட்டுச் சென்றான் எனில்; நம்மில் யாரே உய்வார் -
(அவ்விராமனிடமிருந்து) நம்மவரில் யார்தான் தப்பிப் பிழைக்க முடியும்?;
எனக்கொண்டு - என்று கருதி; உணர்தோறும் நையா நின்றேன் -
எண்ண, எண்ண நொந்திருக்கின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? -
இப்போது (இவ்வாறு என்னிடம்) மேலும் கூறி என் வருத்தத்தை
மிகுதிப்படுத்துவாயோ?

     விராதன் வதை நமக்கு ஒரு பாடமன்றோ என மாரீசன் எடுத்துக்
கூறினான். விராதனை இராமலக்குவர் வாளால் அழித்தனர். (2550) இங்கே
அம்பு என்றது ஆயுதம் என்ற பொருளில் கொள்ளத்தக்கது.          15