3251. | 'வெய்யோர் யாரே, வீர விராதன் துணை வெய்யோர்? ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு அவன் என்றால், உய்வார் யாரே நம்மில் எனக் கொண்டு, உணர்தோறும், நையாநின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? |
வெய்யோர் - கொடியவர்களில்; வீர விராதன் துணை வெய்யோர்- வீரனாகிய விராதனுக்கு இணையான கொடியவர்; யாரே - யார் உளர்?; அம்பொடும் - (இராமபிரான்) அம்பினால்; ஐயோ - என்ன பரிதாபம்!; உம்பர்க்கு அவன் போனான் என்றால் - வானுலகுக்கு அவனும் கொல்லப்பட்டுச் சென்றான் எனில்; நம்மில் யாரே உய்வார் - (அவ்விராமனிடமிருந்து) நம்மவரில் யார்தான் தப்பிப் பிழைக்க முடியும்?; எனக்கொண்டு - என்று கருதி; உணர்தோறும் நையா நின்றேன் - எண்ண, எண்ண நொந்திருக்கின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? - இப்போது (இவ்வாறு என்னிடம்) மேலும் கூறி என் வருத்தத்தை மிகுதிப்படுத்துவாயோ? விராதன் வதை நமக்கு ஒரு பாடமன்றோ என மாரீசன் எடுத்துக் கூறினான். விராதனை இராமலக்குவர் வாளால் அழித்தனர். (2550) இங்கே அம்பு என்றது ஆயுதம் என்ற பொருளில் கொள்ளத்தக்கது. 15 |