3252. | 'மாண்டார், மாண்டார்; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா, வேண்டா; செய்திடின், உய்வான் விதி உண்டோ? ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்? அறம் நோனார், ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? எல்லாம் இலர் அன்றோ? | மாண்டார் மாண்டார் - ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனி நீ - இனிமேல் நீ; மாள்வார் தொழில் செய்ய - மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய; வேண்டா வேண்டா - (அருள் கூர்ந்து) முற்பட வேண்டாம்; செய்திடின் - நீ அவ்வாறு செய்வாயானால்; உய்வான் விதி உண்டோ - தப்பிப் பிழைக்க வழியும் உண்டோ? (இல்லை); ஆண்டார் ஆண்டார் - உனக்கு முன்னே இவ்வுலகை ஆண்டு சென்றோர்; எத்தனை என்கேன் - எத்தனையென்று கணக்குரைக்க முடியாது; அறம் நோனார் - அறத்தை நோற்காதவர்; ஈண்டார் - நிலை பெற்று நின்றதில்லை; ஈண்டு ஆர் நின்றவர் - (மேலும்) இவ்வுலகில் அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை; எல்லாம் இலர் அன்றோ? - எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே? அழிகின்றவர் செய்யும் செயலை நீயும் செய்யாதே. அறவழி நிற்போரே உண்மையில் அழியாதார். மற்றொன்று, யாக்கை நிலையாமை உணர்ந்து உண்மைகளைத் தேறுதல் வேண்டும் என மாரீசன் பலவாறு அறம் கூறினான். 16 |