3253.'எம்பிக்கும் என் அன்னைதனக்கும்
     இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லிதனக்கும்,
     அயல் நிற்கும்
தம்பிக்கும், என் ஆண்மை
     தவிர்ந்தே தளர்வுற்றேன்;
கம்பிக்கும் என் நெஞ்சு, அவன்
     என்றே; கவல்கின்றேன்.

    'எம்பிக்கும் - என் தம்பி சுபாகுவுக்கும்; என் அன்னை தனக்கும் -
என் தாய் தாடகைக்கும்; இறுதிக்கு - உயிருக்கு அழிவு நேரும்படி; ஓர்
அம்பு உய்க்கும் -
ஒப்பற்ற தன் இராம பாணத்தை ஏவிய; போர் வில்லி
தனக்கும் -
போராற்றல் வாய்ந்த வில்லாளியான இராமனுக்கும்; அயல்
நிற்கும் தம்பிக்கும் -
அவன் அருகிலேயே இருக்கும் தம்பி
இலக்குவனுக்கும்; என் ஆண்மை தவிர்ந்தே - என் வீரம் பின்னடைந்து;
தளர்வுற்றேன் - மெலிந்துள்ளேன்; அவன் என்றே - அந்த இராமன்
அல்லவா (உனக்கும் பகையாவான்) என்று; கம்பிக்கும் என் நெஞ்சு -
என் மனமும் மிக நடுங்கும்; கவல்கின்றேன் - (விளைவு எண்ணிக்)
கவலையும் கொள்ளுகின்றேன்.

     'முன்னர் ஏற்பட்ட அனுபவத்தால் இராமனின் வல்லமையை நான்
அறிவேன். அதனால் கலங்குகின்றேன்' என்றான் மாரீசன்.17