இராவணன் மாரீசனை முனிதல் கலி விருத்தம் 3255. | ' "கங்கை சடை வைத்தவனொடும் கயிலை வெற்பு ஓர் அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித் தோள், இங்கு ஓர் மனிதற்கு எளிய" என்றனை' என, தன் வெங் கண் எரிய, புருவம் மீதுற, விடைத்தான். |
(மாரீசன் அறிவுரை கேட்ட இராவணன்), 'கங்கை சடை வைத்த வனொடும் - கங்கையைத் தலையின் மீது வைத்திருக்கும் சிவபெருமானோடு; கயிலை வெற்பு - கயிலையங்கிரியை; ஓர் அங்கையின் எடுத்த - உள்ளங்கை ஒன்றால் எடுத்த; எனது ஆடு எழில் மணித் தோள் - என்னுடைய அழகு பொலியும் மாணிக்கத் தோள்கள்; இங்கு ஓர் மனிதற்கு எளிய - இவ்வுலக மானுடன் ஒருவனுக்கு இளைத்து விட்டன; என்றனை என - என்று கூறிவிட்டாயே என்று; தன் வெங் கண் எரிய - தன் கொடிய கண்களில் நெருப்புத் தவழ; புருவம் மீதுற - புருவங்கள் சினத்தால் மேலுயர; விடைத்தான் - பெருஞ் சினம் அடைந்தான். கயிலையங்கிரி எடுத்தவனுக்கு மானுடன் வலியவன் ஆவானோ என்றான் இராவணன். 19 |