மீண்டும் மாரீசன் கூறுதல்

3257. தன்னை முனிவுற்ற
     தறுகண் தகவிலோனை,
பின்னை முனிவுற்றிடும் எனத்
     தவிர்தல் பேணான்
'உன்னை முனிவுற்று உன்
     குலத்தை முனிவுற்றாய்;
என்னை முனிவுற்றிலை; இது
     என்?' என இசைத்தான்.

    தன்னை முனிவுற்ற - தன் மீது சினம் கொண்ட; தறுகண் - வீரம்
உடையவனும்; தகவு இலோனை - பெருமை இல்லாதவனுமான
இராவணனை; பின்னை முனிவுற்றிடும் எனத் - மேலும் தன் மீது கோபம்
கொள்ளுவான் என்பதனால்; தவிர்தல் பேணான் - அறிவுரை கூறாது
விலக விரும்பாதவனாய்; 'உன்னை முனிவுற்று - உன்னோடு நீயே சினம்
கொண்டு; உன் குலத்தை முனிவுற்றாய் - உன் குலத்தோடும் சினம்
கொண்டாய்; (உண்மையில்); என்னை முனிவுற்றிலை - என்னோடு
சினமுற்றாய் இல்லை; இது என் -  ஏன் இவ்வாறு செய்கிறாய்'; என
இசைத்தான் -
என்று கேட்டான்.

     உன் சினம் எனக்குச் செய்யும் அழிவினும் உனக்கும் குலத்துக்கும்
அழிவு தருவதாகும் என மாரீசன் சுட்டிக் காட்டுகிறான்.             21