3259. | 'யாதும் அறியாய்; உரை கொளாய்; இகல் இராமன் கோதை புனையாமுன், உயிர் கொள்ளைபடும் அன்றே; பேதை மதியால், "இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்; சீதை உருவோ? நிருதர் தீவினை அது அன்றோ? |
'யாதும் அறியாய் - இராமன் வலிமை முதலானவற்றை முழுதும் அறியாதவன் நீ; உரை கொளாய் - எடுத்துச் சொன்னாலும் உணர மறுக்கிறாய்; இகல் இராமன் கோதை புனையா முன் - உன் பகையாய் நீ கருதும் இராமன் போர் புரியத் தும்பை மாலை சூடு முன்; உயிர் கொள்ளை படும் அன்றே - அவன் பகைவர் உயிர் சூறையாடப்படும் அன்றோ?; பேதை மதியால் - அறியாமை கொண்ட மதியால்; இஃது ஓர் பெண் உருவம் என்றாய் - (சீதையை) ஒரு மனிதப் பெண்ணாக மதித்திருக்கின்றாய்; அது சீதை உருவோ? - உண்மையில் அது சீதையின் வடிவமோ? (அன்று); நிருதர் தீவினை அன்றோ - அரக்கர் இழைத்த பாவத்தின் வடிவம் அன்றோ?' தானும் அறியான், சொல் புத்தியும் கேளான் என இராவணனை இகழ்ந்தான் மாரீசன். இராமன் போருக்கு மாலை சூடு முன்பே பகைவர் உயிரிழப்பர் என அவன் ஆற்றலின் மிகுதி கூறினான். கோதை - மாலை. இங்கே அதிரப் பொருவதற்கு அடையாளமாகிய தும்பைப் பூ மாலை.23 |