3262.'வேதனை செய் காம விடம்
     மேலிட மெலிந்தாய்;
தீது உரைசெய்தாய்; இனைய செய்கை
     சிதைவு அன்றோ?
மாதுலனும் ஆய், மரபின் முந்தை
     உற வந்தேன்,
ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை!
     தவிர்க' என்றான்.

    வேதனை செய் காம விடம் - துயரம் தருகின்ற காமம் என்ற நஞ்சு;
மேலிட மெலிந்தாய் - மிகுதிப்படச் சோர்வுற்றாய்; தீது உரை செய்தாய் -
கொடுஞ் சொற்களையும் கூறினாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ -
இவ்வாறு செய்தல் அழிவு ஆகுமன்றோ?; மாதுலனும் ஆய் - உனக்கு
மாமன் உறவுடையவனாய்; மரபின் முந்தை உற வந்தேன் - உன்
குலத்தில் முந்திப் பிறந்தவனானேன்; ஈது உரை செய்தேன் -
இம்மொழிகளை உனக்குச் சொன்னேன்; எந்தை - என ஐயா; அதனைத்
தவிர்க -
இத்தீய கருத்தை விட்டு விடுக; என்றான் - என (மாரீசன்
இராவணனுக்கு மறுபடியும் அறிவுரை பகன்றான்.

     உன் குலத்து முந்தியவன் என்பதால் நீ என்னைக் கடிந்த போதும்
நல்லன கூறினேன் என அறிவுரை கூறினான் மாரீசன். மாதாவின் உடன்
பிறப்பு மாதுலன்.                                             26