3263. என்ன, உரை அத்தனையும்,
     எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின அரக்கர்
     பதி சொன்னான்:
'அன்னை உயிர் செற்றவனை
     அஞ்சி உறைகின்றாய்;
உன்னை, ஒருவற்கு ஒருவன்
     என்று உணர்க்கை நன்றே?

    என்ன, உரை அத்தனையும் - என்று மாரீசன் சொன்ன கூற்றுகள்
அனைத்தையும்; எத்தனையும் எண்ணிச் சொன்னவனை - சிறிதேனும்
எண்ணிப் பார்க்கும்படிக் கூறிய மாரீசனை; ஏசின - இகழ்ந்த; அரக்கர்பதி
சொன்னான் -
அரக்கர் தலைவனாகிய இராவணன் கூறலானான்; 'அன்னை
உயிர் செற்றவனை -
உன் தாய் தாடகையின் உயிரை அழித்தவனை;
அஞ்சி உறைகின்றாய் - எண்ணி அச்ச முற்று இன்னும்
உயிர்வாழ்கின்றாய்; உன்னை - (அப்படிப்பட்ட) உன்னை; ஒருவற்கு
ஒருவன் என்று -
ஓர் ஆண்மையாளன் என்று; உணர்கை நன்றோ -
நினைப்பது பொருத்தமாகுமா? (ஆகாது என்றபடி).

     தாயைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்காத நீயும் ஆண்
மகன்தானா என மாரீசனிடம் இராவணன் வினவினான். ஒருவற்கு ஒருவன் -
இணையான சிறப்புள்ள வீரன் என மதித்தல் எனப் பொருள் பட்டது.27