3264.'திக்கயம் ஒளிப்ப, நிலை
     தேவர் கெட, வானம்
புக்கு, அவர் இருக்கை புகைவித்து,
     உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ,
     தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர்? இது
     நன்று வலி அன்றோ?

    'திக்கயம் ஒளிப்ப - திசை யானைகள் ஓடி ஒளிந்து கொள்ளவும்;
தேவர்நிலை கெட - தேவர் தங்கள் பெருமை அழியவும்; வானம் புக்கு -
விண்ணுலகை நண்ணி; அவர் இருக்கை புகைவித்து - அவர்களின் மாட
மாளிகைகளை நெருப்புக்கு இரையாக்கி; உலகம் யாவும் -
அனைத்துலகங்களிலும்; சக்கரம் நடத்தும் - ஆணைச் சக்கரம் செலுத்தும்;
எனையோ - (நிகரற்ற) என்னையோ; தயரதன் தன் மக்கள் நலிகிற்பர் -
தசரதன் புதல்வரான இராமலக்குவர் அழிக்க வல்லார்?; வலி இது நன்று
அன்றோ -
இந்த ஆற்றலும் நன்று நன்று (என்றான்)

     ஏளனம் தோன்றும்படி தன் வலிமையோடு இராமலக்குவர் வலிமையை
ஒப்பிட்டுக் காட்டிப் பேசினான் இராவணன். நன்று நன்று என்ற அடுக்கு
ஏளனம் குறித்தது.                                            28