3266.'மறுத்தனை எனப் பெறினும்,
     நின்னை வடி வாளால்
ஒறுத்து, மனம் உற்றது
     முடிப்பென்; ஒழிகல்லேன்;
வெறுப்பன கிளத்தலுறும் இத்
     தொழிலை விட்டு, என்
குறிப்பின்வழி நிற்றி, உயிர்கொண்டு
     உழலின்' என்றான்.

    மறுத்தனை எனப் பெறினும் - என் கட்டளையை நீ மறுத்தாய்
என்றாலும்; நின்னை - உன்னை; வடிவாளால் - என் கூர்மையான
வாளால்; ஒறுத்து - வெட்டி; மனம் உற்றது முடிப்பென் - என் மனம்
கருதியதை நிறைவேற்றுவேன்; ஒழிகல்லேன் - இந்நிலையிலிருந்து
விலகமாட்டேன்; வெறுப்பன - நான் வெறுக்கும் அறிவுரைகளை;
கிளத்தலுறும் இத்தொழிலை விட்டு - எடுத்துக் கூறும் இந்தச் செயலை
விட்டொழித்து; உயிர் கொண்டு உழலின் - அவ்வாறு செய்தால் உயிரோடு
பிழைக்கலாகும்; என் குறிப்பின் வழி நிற்றி - என் கருத்தின் வழியே
நின்று செயல் புரிவாயாக; என்றான்- என்று (இராவணன் மாரீசனுக்குக்)
கூறினான்.

     அறிவுரைகளை ஏற்கும் நிலையில் அவன் இல்லை என்பதையும்,
முடிவுகளை எடுத்த நிலையில் உள்ளான் என்பதையும் இராவணன் பேச்சுப்
புலப்படுத்துகின்றது.                                           30