மாரீசன் உடன்படல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3267. | அரக்கன் அஃது உரைத்தலோடும், அறிந்தனன் அடங்கி, ' "நெஞ்சம் தருக்கினர் கெடுவர்" என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ? "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார்தம்மின ஆர் செருக்கர்?' என்னா, உருக்கிய செம்பின் உற்ற நீர் என, உரைக்கலுற்றான்: |
அரக்கன் அஃது உரைத்தலோடும் - இராவணன் அவ்வாறு கூறியதும்; அறிந்தனன் அடங்கி - இராவணன் மனப்போக்கை அறிந்தவனாய் அடக்கம் மேற்கொண்டு; 'நெஞ்சம் தருக்கினர் கெடுவர்' என்றல் - மனச் செருக்குக் கொண்டவர்கள் அழிவார்கள் என்பது; தத்துவ நிலையிற்று அன்றோ - ஆழ்ந்த தத்துவ நிலையுடையது அல்லவா? (மேலும்); "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார் தம்மின் - செருக்கு உற்றவர்களை அழித்துவிடுவோம் என்று கருதுவோரைவிட; ஆர் செருக்கர் - மிகுந்த செருக்கு உடையவர்கள் யார்?; என்னா - என்று மனத்துள் நினைத்து; உருக்கிய செம்பின் உற்ற நீர் என - உருக்கப்பட்ட செம்பின் மீது பட்ட தண்ணீர்த்துளி வற்றுதல் போல; (வேகம் குன்றி); உரைக்கலுற்றான் - மாரீசன் பேசலுற்றான். தருக்குற்றார் அழிவர். தருக்குற்றவனைத் திருத்துதலும் பேதைமை என உணர்ந்து மாரீசன் அடங்கினான். மாரீசனின் உணர்வு முற்றும் அடங்கினமைக்கு உருக்கிய செம்பின் உற்ற நீர் உவமை.31 |