3268. | உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் உணர்த்தினேன்; மற்று, என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்; நன்மையும் தீமை அன்றே, நாசம் வந்து உற்ற போது? புன்மையின் நின்ற நீராய்! செய்வது புகல்தி' என்றான். |
'உன்வயின் உறுதி நோக்கி - (இராவணனாகிய) உன் நலத்தினை நாடி; உண்மையின் உணர்த்தினேன் - உண்மையாகவே எடுத்துக் கூறினேன்; மற்று - அவ்வாறன்றி; என்வயின் இறுதி நோக்கி - எனக்கு அழிவு நேரும் என்று கருதி; அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் - பயம் காரணமாக நான் அறிவுரை கூறினேன் இல்லை; நாசம் வந்து உற்றபோது - அழிவு நெருங்கி வரும் நேரத்தில்; நன்மையும் தீமை அன்றே - நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும் அல்லவா?; புன்மையின் நின்ற நீராய் - தீய நெறியில் செல்லும் தன்மை உடையவனே; செய்வது புகல்தி - நான் செய்ய வேண்டியதைச் செப்புக'; என்றான் - என மாரீசன் (உடன்பட்டுப்) பேசினான். 32 |