3271. ஆயவன் அனைய கூற, அரக்கர் கோன்,
     'ஐய! நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை, யான்
     கொலச் சமைந்து நின்றேன்;
போய், ஐயா! புணர்ப்பது என்னே என்பது
     பொருந்திற்று ஒன்றோ?
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல்
     அவளை' என்றான்.

    ஆயவன் அனைய கூற - மாரீசன் அவ்வாறு மொழியவும்; அரக்கர்
கோன் -
அரக்கர் தலைவனான இராவணன்; 'ஐய - ஐயனே; உன் தாயை
நொய்து ஆருயிர் உண்டானை -
உனது தாயான தாடகையை இழிவான
முறையில் மிக எளிதில் அழித்தவனை; கொல - கொல்லுதற்கு; யான்
சமைந்து நின்றேன் -
நான் ஒருப்பட்டு நிற்கின்றேன்; ஐயா போய்ப்
புணர்ப்பது என்னே -
ஐயனே, போய்ச் செயத் தக்கது என்ன; என்பது -
என நீ கேட்பது; பொருந்திற்று ஒன்றோ - பொருத்தமான கேள்விதானா?;
அவளை - அச்சீதையை; மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் -
மாயம் செய்து வஞ்சனையால் அன்றோ பற்றுதல் வேண்டும்; என்றான் -
என்று (இராவணன்) கூறினான்.

     'என்ன செய்வது என்பதும் ஒரு கேள்வியா? போரிடுவதில்லை என
முன்னமே சொல்லியிருப்பதால் மாய வஞ்சமே வழி' என இராவணன்
கூறினான்.                                                  35