3272.'புறத்து இனி உரைப்பது என்னே?
     புரவலன் தேவிதன்னைத்
திறத்துழி அன்றி, வஞ்சித்து
     எய்துதல் சிறுமைத்து ஆகும்;
அறத்து உளது ஒக்கும் அன்றே? அமர்த்தலை
     வென்று கொண்டு, உன்
மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன
     மாரீசன் சொன்னான்.

    மன்ன - வேந்தனே; புறத்து இனி உரைப்பது என்னே - இனி
மேல் வேறு கூறுதற்கு யாது உள்ளது!; புரவலன் தேவி தன்னை - உலகு
காக்கும் இராமனின் மனைவியை; திறத்துழி அன்றி - உன் திறன்
காரணமாக அன்றி; வஞ்சித்து எய்துதல் - வஞ்சனையால் அடைதல்
என்பது; சிறுமைத்து ஆகும் - உன் தகுதிக்குத் தாழ்வானது ஆகும்;
அமர்த்தலை வென்று கொண்டு - போரில் இராமனை வெற்றி கொண்டு;
உன் மறத்துறை வளர்த்தி - உன் வீரத் தகுதியை வளர்த்துக்
கொள்வாயாக; அறத்து உளது ஒக்கும் அன்றே - அவ்வாறு செய்வது
நீதியின் மரபுக்குப் பொருந்துவதும் ஆகும் அல்லவா?; என்ன மாரீசன்
சொன்னான் -
என்று மாரீசன் இராவணனிடம் கூறினான்.

     உன் தகுதிக்கும் பெருமைக்கும் வஞ்சனை தக்கதன்று; வீரத்தால்
வெல்லுவதே மேன்மை என்று மாரீசன் கூறினான்.                  36